tiruvAcakam of mANikka vAcakar- part I (in tamil script, unicode format) tiruvAcakam of mAnikka vAcakar -part I in Tamil script, Unicode/UTF-8 format) திருவாசகம் -I (மாணிக்க வாசகர் அருளியது) Acknowledgements: Our Sincere thanks go to Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland for the preparation of this work for publication. This work (tiruvAcakam) was first released in Mylai, Inaimathi formats in March 1998 and then in TSCII encodng from Dec 12, 2000 The work is presented in Unicode encoding (utf-8 format). © Project Madurai, 1998-2021. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. Feel free to send the corrections by email to the webmaster "pmadurai@gmail.com". tiruvAcakam of mAnikka vAcakar திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது) பொருள் அடக்கம் 1 சிவபுராணம் (1) மின்பதிப்பு 2. கீர்த்தித் திரு அகவல் (2) மின்பதிப்பு 3. திருவண்டப் பகுதி (3) மின்பதிப்பு 4. போற்றித் திருஅகவல் (4) மின்பதிப்பு 5. திருச்சதகம் (5 - 104) மின்பதிப்பு 6. நீத்தல் விண்ணப்பம் (105 - 154) மின்பதிப்பு 7. திருவெம்பாவை (155 - 174) மின்பதிப்பு 8. திரு அம்மானை (175 - 194) மின்பதிப்பு 9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் (195 - 214) மின்பதிப்பு 10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் (215 - 234) மின்பதிப்பு 1. சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளியது) தற்சிறப்புப் பாயிரம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க         5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க         10 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி         15 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.         20 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்         25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்         30 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே         35 வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே         40 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே         45 கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை         50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,         55 விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்         60 தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்         65 பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே         70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்         75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்         80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று         85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே         90 அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.         95 திருச்சிற்றம்பலம் Back 2. கீர்த்தித் திரு அகவல் (தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோர் உலகும் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்         5 என்னுடை இருளை ஏறத்துரந்தும் அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்         10 கல்லா டத்துக் கலந்து இனிது அருளி நல்லா ளோடு நயப்புறவு எய்தியும் பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும் கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்         15 விராவு கொங்கை நல்தடம் படிந்தும் கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும் மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும்         20 நந்தம் பாடியில் நான் மறையோனாய் அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும் வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும் நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக்         25 கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக் சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் வேலம் புத்தூர் விட்டேறு அருளிக் கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்         30 தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர் வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும் அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்         35 நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று ஈண்டு கனகம் இசையப் பெறா அது ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத்         40 தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் மதுரைப் பெருநல் மாநகர் இருந்து குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்         45 ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப் பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும் உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தக வேடங் காட்டிய இயல்பும் பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித்         50 தூவண மேனி காட்டிய தொன்மையும் வாத வூரினில் வந்து இனிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் திரு ஆர் பொருந்துறைச் செல்வன் ஆகிக் கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்         55 பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப் பாவம் நாசம் ஆக்கிய பரிசும் தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் விருந்தினன் ஆகி வெண்காடு அதனில்         60 குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு அட்ட மாசித்தி அருளிய அதுவும் வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு காடு அது தன்னில் கரந்த உள்ளமும்         65 மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் ஓரி ஊரில் உகந்து இனிது அருளி பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்         70 தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோவார் கோலம் கொண்ட கொள்கையும் தேன் அமர் சோலைத் திரு ஆரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும் இடைமருது அதனில் ஈண்ட இருந்து         75 படிமப் பாதம் வைத்த அப்பரிசும் ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்         80 சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் பாவகம் பலபல காட்டிய பரிசும் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் ஐயாறு அதனில் சைவன் ஆகியும்         85 துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும் கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் புறம்பயம் அதனில் அறம்பல அருளியும்         90 குற்றாலத்துக் குறியாய் இருந்தும் அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு இந்திர ஞாலம் போலவந்து அருளி எவ்வெவர் தன்மையும் தன்வயிள் படுத்துத்         95 தானே ஆகிய தயாபரன் எம் இறை சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் மந்திர மாமலை மகேந்திர வெற்பன்         100 அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும்         105 ஆனந் தம்மே ஆறா அருளியும் மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும்         110 மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி காதலன் ஆகிக் கழுநீர் மாலை ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும் அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்         115 பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் மீண்டு வாராவழி அருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி ஆகவும் பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன் உத்தர கோச மங்கை ஊர் ஆகவும்         120 ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய தேவ தேவன் திருப் பெயர் ஆகவும் இருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை அருள்மலை யாகவும் எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும்         125 அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி நாயினேனை நலம்மலி தில்லையுள் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர்         130 ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் எய்த வந்திலாதார் எரியில் பாயவும் மாலது வாகி மயக்கம் எய்தியும் பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும் கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி         135 நாத நாத என்று அழுது அரற்றி பாதம் எய்தினர் பாதம் எய்தவும் பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன்         140 பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன்         145 ஒலிதரு கைலை உயர்கிழ வோனே திருச்சிற்றம்பலம் Back 3. திருவண்டப் பகுதி ( தில்லையில் அருளயது - இணைக் குறள் ஆசிரியப்பா) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்         5 சிறிய ஆகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து         10 எறியது வளியின் கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போன் காக்கும் கடவுள், காப்பவை காப்போன், கரப்பவை கருதாக்         15 கருத்துடைக் கடவுள், திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும் அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு         20 மதியில் தண்மை வைத் தோன், திண்திறல் தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன், மேதகு காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட         25 மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று எனைப் பல கோடி எனைப் பல பிறவும் அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்று முன்னோன் காண்க, முழுதோன் காண்க தன்நேர் இல்லோன் தானே காண்க         30 ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க கானம் புலியுரி அரையோன் காண்க நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன் இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க         35 அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க பரமன் காண்க, பழையோன் காண்க பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க, அநேகன் காண்க சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க         40 சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையில் படுவோன் காண்க ஒருவன் என்றும் ஒருவன் காண்க விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க         45 இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க அரிய அதில் அரிய அரியோன் காண்க மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க         50 அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க யாவரும் பெற உறும் ஈசன் காண்க         55 தேவரும் அறியாச் சிவனே காண்க பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க கண்ணால் யானும் கண்டேன் காண்க அருள்நனி சுரக்கும் அமுதே காண்க கருணையின் பெருமை கண்டேன் காண்க         60 புவனியல் சேவடி தீண்டினன் காண்க சிவன் என யானும் தேறினன் காண்க அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க         65 பரமா னந்தம் பழம் கட லதுவே கருமா முகிலில் தோன்றித் திருவார் பெருந்துறை வரையில் ஏறித் திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய         70 வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப் பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட         75 எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக் கேதக் குட்டம் கையற வோங்கி இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம்         80 தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை வானப் பேரியாற்று அகவயின் பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து         85 ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில்         90 மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத் தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க         95 கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க         100 எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க பேர்அமைத் தோளி காதலன் வாழ்க ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க         105 நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் நிற்பன நிறீஇச்         110 சொல்பதம் கடந்த தொல்லோன் உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன் விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும்         115 ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன்று எனக்கு எளிவந்து அருளி அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி         20 ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத்         125 திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்         130 இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும் முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின்         135 ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும் பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்         140 ஒளிfக்கும் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின் பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும்         145 தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி அறைகூவி ஆட்கொண்டருளி மறையோர் கோலம் காட்டி அருளலும் உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு         150 அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித் தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின்         155 ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில்         160 ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் சொல்லுவது அறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு         165 அருளியது அறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்         170 தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதம் ஆன அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175 உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் கருணை வான்தேன் கலக்க         180 அருளொடு பரா அமுது ஆக்கினன் பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே திருச்சிற்றம்பலம் Back 4. போற்றித் திருஅகவல் (தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈர் அடியாலே மூவுலகு அளந்து நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று அடிமுடி அறியும் ஆதரவு அதனில் கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில்         10 யானை முதலா எறும்பு ஈறாய ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும         20 ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும் ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு கடும்பகல் பசி நிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில்         30 ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக் கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்         40 புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும் ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின ஆத்தம் ஆனார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் விரதமே பரம் ஆக வேதியரும்         50 சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தம்தம் தங்களே அமைவது ஆக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி அதில் பெருமாயை எனைப்பல சூழவும் தப்பாமே தாம் பிடித்தது சலியாத் தழலது கண்ட மெழுகு அது போலத்         60 தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் கொடிறும் பேதையும் கொண்டது விடாதென படியே ஆகி நல் இடைஅறா அன்பின் பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் கசிவது பெருகிக் கடல் என மறுகி அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச் சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச்         70 சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் கதியது பரமா அதிசயம் ஆகக் கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப் பிறிவினை அறியா நிழல் அது போல முன் பின்னாகி முனியாது அத்திசை என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி         80 அன்பு எனும் ஆறு கரை அது புரள நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் கண்களி கூர நுண் துளி அரும்ப சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக் கைதரவல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி         90 கூடல் இலங்கு குருமணி போற்றி தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின் ஆர் உருவ விகிர்தா போற்றி கல் நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி         100 இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவா போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி விரை சேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி உடையாய் போற்றி உணர்வே போற்றி         110 கடையேன் அடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி நெறியே போற்றி நினைவே போற்றி வானோர்க்கு அரிய மருந்தே போற்றி ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை ஆழாமே அருள் அரசே போற்றி தோழா போற்றி துணைவா போற்றி         120 வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி விரிகடல் உலகின் விளைவே போற்றி அருமையில் எளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருள் மலையே போற்றி என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி         130 தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி மான்நேர் நோக்கி மணாளா போற்றி வான்அகத்து அமரர் தாயே போற்றி பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி         140 வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவர் உள்ளதது அமுதே போற்றி கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி இடைமருது உறையும் எந்தாய் போற்றி சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீர் ஆர் திருவையாறா போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண் ஆர் அமுதக் கடலே போற்றி         150 ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி பாகம் பெண் உரு ஆனாய் போற்றி பராய்த் துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி குற்றாலத்து எம் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலை எந்தாய் போற்றி பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி         160 அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏனக் குருளைக்கு அருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள் கெட அருளும் இறைவா போற்றி தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி         170 களம் கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி         180 உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி இலங்கு சுடர் எம் ஈசா போற்றி சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலை நாடு உடைய மன்னே போற்றி கலை ஆர் அரிகேசரியாய் போற்றி         190 திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி துரியமும் இறந்த சுடரே போற்றி தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி தேளா முத்தச் சுடரே போற்றி ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி ஆரா அமுதே அருளா போற்றி பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி         200 தாளி அறுகின் தாராய் போற்றி நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி மந்திர மாமலை மேயாய் போற்றி எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி இரும் புலன் புலர இசைந்தனை போற்றி         210 படி உறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி ஒழவற நிறைந்த ஒருவ போற்றி செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி கழு நீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி         220 புரம்பல் எரித்த புராண போற்றி பரம் பரம் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சய சய போற்றி         225 திருச்சிற்றம்பலம் Back 5. திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.         5 கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே.         6 உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே.         7 சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே.         8 தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே.         9 பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும் நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.         10 முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள் செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே.         11 உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும் இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின் உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையக் கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பேவனே.         12 பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான் சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும் அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே புவனெம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே.         13 புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாவமுதே நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே.         14 2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா) நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே.         15 யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன் வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம் மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே.         16 வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன் இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப் பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே.         17 ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே.         18 வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.         19 வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக் சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன் பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே.         20 பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே.         21 அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ் விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன் தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே.         22 வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய் வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே.         23 வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே.         24 3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்) வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்         பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப்         பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்         உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்         கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே.         25 வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று         போதுநான் வினைக் கேடன் என்பாய் போல இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை         ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ         அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோ நான் ஆனவாறு         முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே?         26 ஆயநான் மறையனும் நீயே ஆதல்         அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்         நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்         அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர் பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே         எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே.         27 பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை         பெருமானே என்று என்றே பேசிப் பேசிப் பூசின்தான் திருமேனி நிறைப் பூசி         போற்றி எம்பெருமானே என்று பின்றா நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை         ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ         என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே.         28 வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று         அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம்         எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன் வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி         மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத் திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்         எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே.         29 சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்         கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்         மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை         மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத் தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித்         தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே.         30 தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம்         தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்         கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு இனி என்னே உய்யும் ஆற என்று என்று எண்ணி         அஞ்சு எழுத்தின் பணை பிடித்துக் கிடக்கின்றேனை முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்         கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.         31 கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான்         கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் நாட்டார்கன் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே         நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும்         கேளாதான எல்லாம் கேட்பித்து என்னை மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான்         எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே.         32 விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின்         மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி         அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி         ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற செச்சை மலர் புரையும் மேனி எங்கள்         சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே.         33 தேவர்க்கோ அறியாத தேவ தேவன்         செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி         மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்         யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவன் அடியார் அடியரோடும்         மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே.         34 4. ஆத்ம சுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்) ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே?         35 அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல் நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப் பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே.         36 மாறிநின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மிதி இலிமட நெஞ்சே தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கனெக் சிவன் அவன் திரங் கோள் மேல் நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம் கீறு நின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே.         37 கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர் திருப் பாதம் முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே.         38 அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு         அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள்         கசிந்து உணர்ந்து இருந்தேயும் உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன்         செய்ததும் இலை நெஞ்சே பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை         பரகதி புகுவானே.         39 புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் சுழற்கன்பு நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே.         40 வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனைத் திசையின் பாகமும் பிரிவது திருக்குறிப் பன்றுமற் றதணாலே முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன் இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி யின்னதென் றறியேனே.         41 ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனையென் சிவலோகக் கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே.         42 ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித் தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே.         43 வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேன்நி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகேன் ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே.         44 5. கைம்மாறு கொடுத்தல் (கலிவிருத்தம்) இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.         45 உண்டோ ர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே.         46 மேலை வானவ ரும்மறி யாததோர் கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பேயிவை வந்துபோம் கால மேயுளை யென்றுகொல் காண்பதே.         47 காண லாம்பர மேகட் கிறந்ததோர் வாணி லாப் பொரு ளேயிங்கொர் பார்ப்பெனப் பாண ளேன்படிற் றாக்கையை விட்டுனைப் பூணு மாற்றி யேன் புலன் போற்றியே.         48 போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று ஆற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன் ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங் கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே.         49 கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான் நள்ளுங் கீழளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே.         50 எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்குந் தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான் முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ் சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.         51 செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப் புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள் எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன் கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே.         52 கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு இட்ட அன்பரொ டியாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி னோடிரண் டும் அறி யேனையே.         53 அறிவ னேயமு தேஅடி நாயினேன் அறிவ னாகக் கொண்டோ எனை ஆண்டது அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் அறிவ னோவல்ல னோஅரு ளீசனே.         54 6. அநுபோகசுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்) ஈசனேயென் எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே.         55 செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் பொய்யார் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும் பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே.         56 போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி வாரே றிளமென் முலையாளே டுடன்வந் தருள அருள்பெற்ற சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட ஊரே றாயிங் குழல்வேணே கொடியான் உயிர்தான் உளவாதே.         57 உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிக்கொண்டாய் மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே.         58 மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக் கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே.         59 உடையா னேநின்றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல் உடையா ருடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயிற் கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன் முடையா புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக் முடித்தாயே.         60 முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் னடியாரைப் பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய் துடித்த வாறுங் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர் பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே.         61 தேனைப் பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார்தம் ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன் தானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்குத் தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாமென் தன்மையே.         62 தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயன புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான் பொன்னே திகழுந் திருமேனி எந்தா யெங்குப் புகுவேனே.         63 புகுவே னெனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினேன் நெடுமன் பில்லை நினைக்காண நீயாண்டருள் அடியேனுந் தகுவ னேயென் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.         64 7. காருணியத்து இரங்கல் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில் ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி.         65 போற்றியோ நமச்சி வாய புயங்களே மயங்கு கின்றேன் போற்றியோ நமச்சி சாய புகலிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சி வாய புறமெனப் போக்கில் கண்டாய் போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி.         66 போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல் போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி போற்றி நின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக் காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவுளானே.         67 கடவுளே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி விடவுளே உருக்கி யென்னை ஆண்டிட வேண்டும் போற்றி உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.         68 சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே.         69 இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி பழித்தனன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே.         70 எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி.         71 ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருவவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருகநின் பாதம் போற்றி தமியனேன் தீர்த்தே.         72 தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி பேர்ந்துமென் பொய்மை யாட்கொண்டருளும் பெருமை போற்றி வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதமா வள்ளல் போற்றி ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி.         73 போற்றிப் புவனம் நீர்தீர் காலொடு வான மானாய் போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய் போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய் போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே.         74 8. ஆனந்தத்து அழுத்தல் (எழுசீர் ஆசிரிய விருத்தம்) புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம் புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின்கழல் கணே புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே.         75 போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும் ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே.         76 ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்பிரான் மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே.         77 வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே.         78 வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே.         79 நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால் தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே.         80 எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே.         81 ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால் தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே.         82 சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால் முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே.         83 இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள் கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும் நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும் விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே.         84 9. ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை) விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு இனை வைத்தாய் இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் மிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே.         85 பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால் ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே.         86 அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே.         87 காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும் பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே.         88 மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.         89 புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே.         90 தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே.         91 அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே.         92 பணிவார் பிணி தீர்ந்து அருளிப் பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால் திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே.         93 யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.         94 10. ஆனந்த அதீதம் (எண்சீர் ஆசிரிய விருத்தம்) மாறு இலாத மாக் கருணை வெள்ளமே         வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை வேறு இலாப் பதம் பரிசு பெற்ற நின்         மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து         ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் கீறு இலாத நெஞ்சு உடையேன் ஆயினன்         கடையன் நாயினன் பட்ட கீழ்மையே.         95 மை இலங்கு நல் கண்ணிப் பங்கனே         வந்து என்னைப் பணிகொண்ட பின்மழக் கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்         அரியை என்று உனைக் கருது கின்றேன் மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய்         மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீ         போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே.         96 பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்         போதஎன்றுஎனைப் புரிந்து நோக்கவும் வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்         மாண்டிலேன் மலர்க் கமல பாதனே அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும்         நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை இருத்தினாய் முறையோ என் எம்பிரான்         வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே.         97 இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே         ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு         என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் எல்லை இல்லை நின் கருணை எம்பிரான்         ஏதுகொண்டு நான் ஏது செய்யினும் வல்லையே எனக்கு இன்னும் உன் கழல்         காட்டி மீட்கவும் மறு இல் வானனே.         98 வான நாடரும் அறி ஒணாத நீ         மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ ஏனை நாடரும் தெரி ஒணாத நீ         என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா         உருகி நான் உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா         நைய வையகத்து உடைய விச்சையே.         99 விச்சு அது இன்றியே விளைவமு செய்குவாய்         விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்         புலையனேனை உன்கோயில் வாயிலிற் பிச்சன்ஆக்கினாய் பெரிய அன்பருக்கு         உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும் கொலார்         நானும் அங்கனே உடைய நாதனே.         100 உடைய நாதனே போற்றி நின் அலால்         பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி உடையனே பணி போற்றி உம்பரார்         தம் பராபரா போற்றி யாரினும் கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்         கருணையாளனே போற்றி என்னை நின் அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்         அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே.         101 அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே         அகம்நெக அள் ஊறு தேன் ஒப்பனே உனக்கு அரிய அன்பரில்         உரியனாய் உனைப் பருக நின்றது ஓர் துப்பனே சுடர் முடியனே துணை         யாளனே தொழும்பாளர் எய்ப்பனில் வைப்பனே எனை வைப்பதோ சொலாய்         நைய வையகத்து எங்கள் மன்னனே.         102 மன்ன எம்பிரான் வருக என் எனை         மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் முன்ன எம்பிரான் வருக என் எனை         முழுதும் யாவையும் இறுதி உற்ற நான் பின்ன எம்பிரான் வருக என் எனைப்         பெய் கழற் கண் அன்பாய் என் நாவினால் பன்ன எம்பிரான் வருக என் எனைப்         பாவ நாச நின் சீர்கள் பாடவே.         103 பாடவேன்டும் நான் போற்றி நின்னையே         பாடிநைந்துறைந்துறுகி நெக்குநெக்கு ஆடவேன்டும் நான் போற்றி அம்பலத்         தாடுநின்கழற்போது நாயினேன் கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக்         கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் வீடவேண்டும் நான் போற்றி வீடுதந்         தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.         104 திருச்சிற்றம்பலம் Back 6. நீத்தல் விண்ணப்பம் (திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை) கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.         105 கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே.         106 காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார் ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே.         107 வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே.         108 செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள் விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.         109 மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே.         110 பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே.         111 தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே.         112 இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே.         113 பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே.         114 மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே.         115 நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுதப் பெருங்கடலே.         116 கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணைக் கடலின் உள்ளம் விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே.         117 வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும் விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே.         118 களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம் ஒளிவந்த பூம்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே அளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே.         119 என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன் மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே.         120 பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வார் வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே.         121 இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய் அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.         122 மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும் விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர் ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே.         123 கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே.         124 ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண் டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத் தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே.         125 ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே.         126 பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே.         127 உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப் பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே.         128 எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே.         129 பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே.         130 கொழுமணியேர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே.         131 புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய் கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே.         132 குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் விலங்கலெந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை அலங்கலந் தாமரை மேனியிப் பாவொப்பி லாதவனே மலங்களைத் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே.         133 மத்தறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி வித்தறு வேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சிக் கொத்தறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் தத்தறு நீறுட னாரச் செஞ்சாந்தணி சச்சையனே.         134 சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம் விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக் கச்சையனே கடந்தாய்தடந்தாள அடற்கரியே.         135 அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால் தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழலக் கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே.         136 கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள் பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக் கொண்டெனெந் தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே.         137 குதுகுதுப்பின்றி றென்குறிப்பேசெய்து நின்குறிப்பில் விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து எதிர்வதெப் போது பயில்வி கயிலைப் பரம்பரனே.         138 பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம் பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே.         139 பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம் ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே.         140 அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால் விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் ணகைக்கருங்கண் திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான் வந் தடர்வனவே.         141 அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம் விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ் சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே தொடர்வரி யாம் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே.         142 தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே எனக் கெய்ப்பில்வைப்பே தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே.         143 வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக் கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும் மலைத்தலை வாமலை யாம்மணவாள என் வாழ்முதலே.         144 முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடிப் பமூழ்கி விதலைச் செய்வேனை விடுதிகண்டாய் விடக் கூன்மிடைந்த சிதலைச் செய்காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ திதலைச் செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே.         145 கதியடி யேற்குன் கழல்தற்தருளவும் ஊன்கழியா விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற் பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே.         146 மன்னவனே யொன்று மாற்றியாச்சிறியேன் மகிழ்ச்சி மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல் சொன்னவனே சொற் கழிந்தவனே கழியாத் தொழும்பர் முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே.         147 முழுதயில் வேற்கண்ணியரென்னும் மூரித் தழல்முழுதும் விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள் தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான் பழுதுசெய்வேனை விடேலுடையாய் உண்னைப் பாடுவனே.         148 பாடிற்றிலேன் பணியேன் மணிநீயொளித் தாய்க்குப்பச்சூன் வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியற் தாங்கலறித் தேடிற்றிலேன் சிவனெவ்விடத்தான்எவர் கண்டனரென்று ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே.         149 உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய் விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபரனேன்றென் றறைவன் பழிப்பினையே.         150 பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம் கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே.         151 தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண் வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடிலென்னைமிக்கார் ஆரடி யானென்னின் உத்தரகோச மங்கைக்கரசின் சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே.         152 சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று விரப்பிப்ப னென்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சன் என்னையும்ஆளுடைப் பிச்சனென் றேசுவனே.         153 ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின் தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே.         154 திருச்சிற்றம்பலம் Back 7. திருவெம்பாவை (திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது) (வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா) ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.         155 பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.         156 முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.         157 ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.         158 மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று) ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.         159 மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.         160 அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர் உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும் சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.         161 கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.         162 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம் இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய்.         163 பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன் கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள் ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார் ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்.         164 மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக் கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற் செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளர் ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.         165 ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும் தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.         166 பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப் கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.         167 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.         168 ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும் ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.         169 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின் மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.         170 செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.         171 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித் கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.         172 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.         173 போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.         174 திருச்சிற்றம்பலம் Back 8. திரு அம்மானை (திருவண்ணாமலையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு ) செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.         175 பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.         176 இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்தருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தம் பறியப் பரிமேற்கொண்டான்தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.         177 வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.         178 கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.         179 கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் திIட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த ஆள்தான்கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்.         180 ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே உலகேழும் ஆயானை ஆள்வானப் பாடுதுங்காண் அம்மானாய்.         181 பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.         182 துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய்.         183 விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.         184 செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்.         185 மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்தந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய்.         186 கையார் வளைசிலம்பக் காதர் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய் வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்.         187 ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.         188 சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.         189 ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.         190 சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி ஆடுவேன் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்.         191 கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறாலச் சீரார் பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால் ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய்.         192 முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞசுனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்.         193 பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.         194 திருச்சிற்றம்பலம் Back 9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் (தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்) முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி         முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சக்தியும் சோமியும் பார்மகளும்         நாமகளோடுபல்லாண்டிசைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்         கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன் ஐயாறன்அம்மானைபாடி         ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.         195 பூவியல் வார்சடை எம்பிராற்குப்         பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்         வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறநிலாமே         குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் தேவியுந் தானும்வந்தெம்மையாளச்         செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே.         196 சுந்தர நீறணந் தும்மெழுகித்         தூயபொன்சிந்தி நிதிநிரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்         எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தார் கோன்அயன் தன்பெருமான்         ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்         கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே.         197 காசணி மின்கள் உலக்கையெல்லாம்         காம்பணி மின்கள் கறையுரலை நேசமுடைய அடியவர்கள்         நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித்         திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாசவினையைப் பறிந்துநின்று         பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே.         198 அறுகெடுப்பார் அயனும்அரியும்         அன்றிமற்றிந்திர னோடமரர் நறுமுது தேவர்கணங்கெளெல்லாம்         நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம் செறிவுடை மும்மதில் எய்தவில்லி         திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்         காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே.         199 உலக்கை பலஒச்சு வார்பெரியர்         உலகமெலாம்உரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்துநின்றார்         காண உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமை ஆண்டுகொண்டு         நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து         பொற்சுண்ணம் இடிந்தும்நாமே.         200 சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத்         தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப         நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் பாடக மெல்லடி யார்க்கு மங்கை         பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை அன்னகோவுக்         காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே.         201 வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்         வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்         சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி         நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி         ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே.         202 வையகம் எல்லாம் உரலதாக         மாமேரு என்னும் உலக்கை நாட்டி மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி         மேதரு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச்         செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே         ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.         203 முத்தணி கொங்கைகள் ஆடஆட         மொய்குழல் வண்டினம் ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்         செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானொடும் ஆடஆடப்         பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொ டாடஆட         ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.         204 மாடு நகைவாள் நிலாவெறிப்ப         வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்         பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெருமானைத்தேடி         சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக்         காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.         205 மையமர் கண்டனை வானநாடர்         மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை ஐயனை ஐயர்பிரானைநம்மை         அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்         போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடந்தைநல்லீர்         பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே.         206 மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்         வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் என்னுடை ஆரமுதெங்களப்பன்         எம்பெருமான் இம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்         தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்         பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே.         207 சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்         தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயிதழுந்துடிப்பச்         சேயிழை யீர் சிவலோகம் பாடிக் கங்கை இரைப்ப அராஇரைக்குங்         கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்         பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே.         208 ஞானக் கரும்பின் தெளியைப் பாகை         நாடற் கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச்         சித்தம் புகுந்துதித் திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட         கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தைநல்லீர்         பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.         209 ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ         டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர் கனாவிலுங் கண்டறியாச்         செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான்         சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்         செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே.         210 தேனக மாமலர்க் கொன்றைபாடிச்         சிவபுரம் பாடித் திருச்சடைமேன் வானக மாமதிப் பிள்ளைபாடி         மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி         உம்பரும் இம்பரும் உய்யஅன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப்         பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே.         211 அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி         அருக்கன் எயிறு பறித்தல்பாடி கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்         காலனைக்காலால் உதைத்தல்பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி         ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி         நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே.         212 வட்டமலர்க்கொன்றை மாலைபாடி         மத்தமும்பாடி மதியம்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்         சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக்         கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின் றாடும் அரவம்பாடி         ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே.         213 வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு         மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதிய மாய் இருள் ஆயினார்க்குத்         துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப் பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்         பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு         ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.         214 திருச்சிற்றம்பலம் Back 10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ.         215 நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.         216 தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.         217 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச் கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.         218 அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.         219 வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.         220 சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக் கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம் சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ.         221 ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.         222 கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.         223 நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந் தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.         224 வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.         225 நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந் தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.         226 நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம் தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார் ஆன கருணையும் அங்குற்றே தானவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.         227 கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.         228 நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான் தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.         229 உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.         230 பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.         231 தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.         232 கள்வன் கடியன் கலதியிவன் என்னாத வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந் தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.         233 பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.         234 திருச்சிற்றம்பலம் Back This Unicode version was last revised on 13 Sept. 2012 Please send your comments and corrections to the Webmaster (pmadurai@gmail.com)