tiruvAcakam of mANikka vAcakar -part II (in tamil script, unicode format) tiruvAcakam of mAnikka vAcakar - part II in Tamil script, Unicode/UTF-8 format) திருவாசகம் -II (மாணிக்க வாசகர் அருளியது) Acknowledgements: Our Sincere thanks go to Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland for the preparation of this work for publication. This work (tiruvAcakam) was first released in Mylai, Inaimathi formats in March 1998 and then in TSCII encodng from Dec 12, 2000 The work is presented in Unicode encoding (utf-8 format). © Project Madurai, 1998-2021. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. Feel free to send the corrections by email to the webmaster "pmadurai@gmail.com". tiruvAcakam of mAnikka vAcakar-part II திருவாசகம் -II (மாணிக்க வாசகர் அருளியது) பொருள் அடக்கம் 11. திருத்தெள்ளேணம் (235 - 254) மின்பதிப்பு 12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம் (255- 274) மின்பதிப்பு 13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல் (275 - 294) மின்பதிப்பு 14. திருஉந்தியார் - ஞான வெற்றி (295 - 314) மின்பதிப்பு 15. திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி (315 - 328) மின்பதிப்பு 16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி (329- 337) மின்பதிப்பு 17. அன்னைப் பத்து - ஆத்தும பூரணம் (338 - 347) மின்பதிப்பு 18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம் (348 - 357) மின்பதிப்பு 19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை (358 - 367) மின்பதிப்பு 20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி (368 - 377) மின்பதிப்பு 21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம் (378 - 387) மின்பதிப்பு 22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் (388 - 397) மின்பதிப்பு 23. செத்திலாப் பத்து (398 - 407) மின்பதிப்பு 24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம் (408 - 417) மின்பதிப்பு 25. ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (418 - 427) மின்பதிப்பு 26. அதிசியப் பத்து - முத்தி இலக்கணம் (428 - 437) மின்பதிப்பு 27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (438 - 447) மின்பதிப்பு 28. வாழாப்பத்து - முத்தி உபாயம் (448 - 457) மின்பதிப்பு 29. அருட்பத்து - மகாமாயா சுத்தி (458 - 467) மின்பதிப்பு 30. திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம் (468 - 474) மின்பதிப்பு 31. கண்டபத்து - நிருத்த தரிசனம் (475 - 484) மின்பதிப்பு 32. பிரார்த்தனைப் பத்து (485 - 495) மின்பதிப்பு 33. குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம் (496 -505) மின்பதிப்பு 34. உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலாடுதல் (506 - 515) மின்பதிப்பு 35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் (516 - 525) மின்பதிப்பு 36. திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு (526 -535) மின்பதிப்பு 37. பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல் (536 - 545) மின்பதிப்பு 38. திருஏசறவு (546 - 555) மின்பதிப்பு 39. திருப்புலம்பல் - சிவானந்த முதிர்வு (556- 558) மின்பதிப்பு 40. குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை (559 - 568) மின்பதிப்பு 41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை (569 -578) மின்பதிப்பு 42. சென்னிப்பத்து - சிவவிளைவு (579 - 588) மின்பதிப்பு 43. திருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல் (589 - 598) மின்பதிப்பு 44. எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை (599 - 604) மின்பதிப்பு 45. ய'த்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல் (605- 614) மின்பதிப்பு 46. திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர் (615 - 616) மின்பதிப்பு 47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை (617 - 627) மின்பதிப்பு 48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல் (628 - 634) மின்பதிப்பு 49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் (635 - 642) மின்பதிப்பு 50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம் (643 - 649) மின்பதிப்பு 51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை (650 - 661) மின்பதிப்பு திருச்சிற்றம்பலம் 11. திருத்தெள்ளேணம் (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.         235 திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும் திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.         236 அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம் சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ.         237 அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.         238 அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம் உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக் கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த திருவந்த வாபாடிக் தெள்ளேணங் கொட்டாமோ.         239 அரையாடு நாகம் அசைத்தபின் அவனியின்மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம் உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த் திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.         240 ஆவா அரிஅயன்இந்திரன் வானோர்க் கரியசிவன் வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித்தாண்டுகொண்டான் பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.         241 கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும் அறம்பாவ மென்றிரண்டச் சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான் மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத் திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.         242 கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால் பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி மின்னோர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர் தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ.         243 கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவே யனவளைத் தோளியோடும் புகுந்தருளி நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம் சினவேற்கண்நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ.         244 கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே அயல்மாண்ட ருவினைச் சுற்றமுமாண்ட வனியினமேல் மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.         245 முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.         246 பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும் ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.         247 மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவாகத்தால் சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ.         248 உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியாம் திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.         249 புத்தன் பரந்தராதி யர்அயன்மேல் போற்றிசெயும் பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த அத்தன் அணிதில்லை அம்பலவண் அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ.         250 உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும் கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும் செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.         251 வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன்கெட் டுயிர்கெட்டுணவுகெட்டென் உள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.         252 விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம் கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித் தென்னாதென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ.         253 குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள் நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும் அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.         254 திருச்சிற்றம்பலம் Back 12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம் (தில்லையில் அருளியது /நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.         255 என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ? மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ.         256 கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.         257 அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.         258 தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ? தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ.         259 அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ? நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ.         260 மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ? சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ.         261 கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ? ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.         262 தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ.         263 தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ.         264 நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.         265 கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி? ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.         266 மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங் கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ.         267 தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ? தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.         268 கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.         269 நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங் கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ.         270 அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ? நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.         271 சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ? நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.         272 அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும் தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ.         273 அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ? அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ.         274 திருச்சிற்றம்பலம் Back 13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல் (தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.         275 எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ.         276 நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான் மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின் வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ.         277 பண்பட்ட தில்லைப் பதிfக்காசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால் புணப்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ.         278 தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும் வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ.         279 எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே புரமூன் றெரத்தவா பூவல்லி கொய்யாமோ.         280 வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான் அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.         281 நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெயது கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடிபட பூவல்லி கொய்யாமோ.         282 பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க் கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ.         283 பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான் காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ.         284 பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ.         285 வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன் ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப் போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ.         286 அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும் நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப் பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.         287 படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங் கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான் தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ.         288 அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும் பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.         289 திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.         290 முன்னாய மாலயனும் வானவரும் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.         291 சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ.         292 அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ.         293 மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ.         294 திருச்சிற்றம்பலம் Back 14. திருஉந்தியார் - ஞான வெற்றி (தில்லையில் அருளியது- கலித்தாழிசை) வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.         295 ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற.         296 தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழந்தன முப்புரம் உந்தீபற.         297 உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற.         298 சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி உந்தீபற உருந்திர நாதனுக் குந்தீபற.         299 ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் று தீபற சதுர்முகன் தாதையென் றுந்தீபற.         300 வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.         301 பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேயேடி யந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற.         302 புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினார் உந்தீபற வானவர் கோனென்றே உந்தீபற.         303 வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சிய வாபாடி உந்தீபற தொடர்ந்த பிறப்பற உந்தீபற.         304 ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி உந்தீபற கொங்கை குலுங்கிநின் றுந்தீபற.         305 உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற கருக்கெட நாமெல்லாம் உந்தீபற.         306 நாமகள் நாசி சிரம்மி மன்படச் சோமன் முகன் நெரித் துந்தீபற தொல்லை வினைகெட உந்தீபற.         307 நான்மறை யோனும் அகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியி லுந்தீபற.         308 சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.         309 தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற.         310 பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே யந்தீபற குமரன்தன் தாதைக்கே உந்தீபற.         311 நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரால் அரிந்ததென் றுந்தீபற.         312 தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம் ஈரைந்தும் இற்றவா றுந்தீபற இறுபதும் இற்றதென் றுந்தீபற.         313 ஏகாசமிட்ட இருடிகள் போகாமல் ஆகாசங்காவலென் றுந்தீபற அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.         314 திருச்சிற்றம்பலம் Back 15. திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி (தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப் பேய்த்தார் முகக்குறும் பேதைகுண மாகாமே தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய் கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம்.         315 என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான் கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித் துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ.         316 பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கிச் செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் விருப்புற்று வேடனார் சேடெறிய மெய்குளிர்த்தங்கு அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ.         317 கற்போலும் நெஞ்சங் கசிந்துருகிக் கருணையினால் நிற்பானைப் போலஎன நெஞ்சினுள்ளே புகுந்தருளி நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன் சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ.         318 நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாயப் புணர்ந்துநின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.         319 புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச் சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையிலனால் தோணோக்கம் ஆடாமோ.         320 தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதையனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப் பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.         321 மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர் வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைத்தடியோம் ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே ஆனந்த மாகிநின் றாடாமே தோணோக்கம்.         322 எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக் கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின் எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மன்மிசை மால்பவர் மாண்டனர்காண் தோணோக்கம்.         323 பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத் தங்கண் இடந்தான் சேவடிமேல் சாத்தலுமே சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.         324 காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன் நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச் சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந் தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ.         325 பிரமன் அரியென் றிருவருக்கம் பேதைமையால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.         326 ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித் தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ.         327 உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும் கரைமாண்ட காமப்பெருங்கடலைக் கடத்தலுமே இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத் துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ.         328 திருச்சிற்றம்பலம் Back 16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி (தில்லையில் அருளியது - ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா) சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப் போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ.         329 மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள் தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக் கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.         330 முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம் பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத் தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப் பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.         331 நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன் மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள் நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.         332 ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக் கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.         333 மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத் தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித் தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால் போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.         334 உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல் என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப் பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.         335 கோலவரைக்குடுமி வந்து குவலத்துச் சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.         336 தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப் பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.         337 திருச்சிற்றம்பலம் Back 17. அன்னைப் பத்து - ஆத்தும பூரணம் (தில்லையில் அருளியது - கலிவிருத்தம்) வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னே என்னும்.         338 கண்ணஞ் சனத்தார் கருணைக் கடலினர் உள்நின் றுருக்குவர் அன்னே என்னும் உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.         339 நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால் அன்னே என்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெரும்துறை அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும்.         340 ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவா றன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுவென்ன அன்னே என்னும்.         341 நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநன் னாடரால் அன்னே என்னும் பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும்.         342 உன்னற் கரியசீர் உத்தர மங்கையர் மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும் மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார் என்ன அதியசம் அன்னே என்னும்.         343 வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக்குப் பாயந்தர் அன்னே என்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டான் உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்.         344 தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவா றன்னே என்னும்.         345 தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையுமிது வென்னே அன்னே என்னும்.         346 கொன்றை மதியமும் கூவின மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே என்னும் துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே இன்றெனக் கானவா றன்னே என்னும்.         347 திருச்சிற்றம்பலம் Back 18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம் (தில்லையில் அருளியது - ஆசிரிய விருத்தம்) கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய்.         348 ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய் ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப் பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய்.         349 நீல வுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவுங் கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில் சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய்.         350 தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன் மான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய்.         351 சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான் முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச் சிந்தூரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய்.         352 இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன் நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக் கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய்.         353 உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன் பொன்னை அழிந்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன் மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன் சேரவன் சோழன் சீரப்புயங் கன்வரக் கூவாய்.         354 வாயிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி ஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன் தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய்.         355 காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே சீருடைச் செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன் பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய்.         356 கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி எந்தம ராம்இவ னென்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும் செந்தழல் போல்திரு மேனித் தேவர்பி ரான்வரக் கூவாய்.         357 திருச்சிற்றம்பலம் Back 19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை (தில்லையில் அருளியது -நேரிசை வெண்பா) ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன் செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் என்று.         358 ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும் நாதன்மை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும் தென்பாண்டி நாடே தெளி.         359 தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர்.         360 செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர் ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் காணுடையான் ஆறு.         361 கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.         362 இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப வான்புரவி யூரும் மகிழ்ந்து.         363 கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள் மாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங் கழுக்கடைகாண் கைக்கொள் படை.         364 இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள் முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற் பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை.         365 ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான் தாளிஅறு காம் உவந்த தார்.         366 சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும் கோதிலா ஏறாம் கொடி.         367 திருச்சிற்றம்பலம் Back $ 20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி (திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம் ) போற்றியென் வாழ்முத லாகிய பொருளே        புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்        எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்        திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்        எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.         368 அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய்        அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருனையின் சூரியன் எழவெழ நயனக்        கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர்        திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே        அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.         369 கூவின பூங்குயில் கூவின கோழி        குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத்து        ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்        திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்        எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.         370 இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்        இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்        தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்        திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்        எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.         371 பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்        போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்        கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா        சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்        எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.         372 பப்பற விட்டிருந்து உணரும்நின் அடியுaர்        பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின்        வணங்குகின்றார் அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்        திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்        எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.         373 அது பழச்சுவையென அமுதென அறிதற்கு        அரிதென எளிதென அமரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே        எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச        மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்        எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே.         374 முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்        மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்        பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்        திருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்        ஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே.         375 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா        விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே        வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே        கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்        எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.         376 புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்        போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்        திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்        படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும் அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்        ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே.         377 திருச்சிற்றம்பலம் Back 21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம் (தில்லையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.         378 முன்னின் றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப் பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார் உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே.         379 உகந்தானே அன்புடை அடிமைக் குருகாவுள்ளத் துணிர்விலியேன் சகந்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன் முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே.         380 முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும் வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக் கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று அழுமதுவேயன் றிமந்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே.         381 அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ.         382 ஏசா நிற்பர் என்னைஉனக் கடியா னென்று பிறரெல்லாம் பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே.         383 இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும் மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்றருளுவாயே.         384 அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர்இங்குப் பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை வாவென்றுன் தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ.         385 சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை விரப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம் தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே.         386 நல்கா தொழியான் நமக்கென்றும் நாமம் பிதற்றி நயனனீர் மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப் பல்காலுன்னப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே.         387 திருச்சிற்றம்பலம் Back 22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் (தில்லையில் அருளியது - எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப்         புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி         உள்ளவா காணவந்தருளாய் தேறலின் தெளிவே சிவபெருமானே         திருப்பெருந்துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே.         388 அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை         ஆனந்த மாய்க் கசிந்துருக என்பாம் அல்லா இன்னருள் தந்தாய்         யானிதற் கிலனொர்கைம்மாறு முன்புமாய்ப் பின்னும் முழுதுமாய்ப்         பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந்துறையாய் சிவபெருமானே         சீருடைச் சிவபுரத்தரைசே.         389 அரைசனே அன்பர்க் கடியனே னுடைய         அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப்         பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே         திருப்பெருந்துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே         யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.         390 உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்         உணர்வுக்குந் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே         எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே         திருப்பெருந்துறையுறை சிவனே குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக்         குறுகினேற் கினியென்ன குறையே.         391 குறைவிலா நிறைவே கோதிலா அமுதே         ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தேன்         மனத்திடை மின்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும்         திருப்பெருந்துறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்         இனியுன்னை யென்னிரக் கேனே.         392 இரந்திரந் துருக என்மனத் துள்ளே         ஏகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்         திருப்பெருந்துறையுறை சிவனே நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால்         ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்         கண்ணுறங் கண்டுகொண்டின்றே.         393 இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளக்         தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்         நீயலால் பிறிது மற்றின்மை சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்        திருப்பெருந்துறையுறை சிவனே ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை        யாருன்னை அறியகிற்பாரே.         394 பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்        பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதேல் அரிய        நின்மலா நின்னருள் வெள்ளச் சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே        திருப்பெருந்துறையுறை சிவனே ஆருற வெனக்கிய காரய லுள்ளார்        ஆனந்தம் ஆக்குமென் சோதி.         395 சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்        ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம்        அறுக்கும் ஆனந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட்குன்றே        திருப்பெருந்துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்        வந்துநின் இணையடி தந்தே.         396 தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்        சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்        யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்        திருப்பெருந்துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்        யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே.         397 திருச்சிற்றம்பலம் Back 23. செத்திலாப் பத்து சிவானந்தம் - அளவறுக்கொணாமை (தில்லையில் அருளியது- எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும்        புகுமலர்க்கழலிணையடி பிரிந்தும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ        விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரனே அருப்பெருங் கடலே        அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச் செய்யமே னியனே செய்வகை அறியேன்        திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே.         398 புற்று மாய்மர மாய்ப்புனல் காலே        உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும் மற்றியாரும் நின்மலரடி காணா        மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் பதையேன் மனமிக உருகேன்        பரிகிலேன் பரியாவுடல் தன்னைச் செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன்        திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே.         399 புலைய னேனையும் பொருளென நினைந்துன்        அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத் தலையினால் நடந்தேன் விடைப்பாகா        சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம் நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே        அடையார்புர மெரிந்த சிலையனே யெனைச் செத்திடப் பணிவாய்        திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே.         400 அன்பராகிமற் றருந்தவம் முயல்வார்        அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம் என்பராய் நினைவார் எனைப்பலர்        நிற்க இங்கெனை எற்றினுக் கண்டாய் வன்பராய் முருடொக்கும் என்சிந்தை        மரக்கண் என்செவி இரும்பினும் வலிது தென்பராய்த் துறை யாய் சிவலோகா        திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே.         401 ஆட்டுத்தேவர் தம் விதியொழிந் தன்பால்        ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன் நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே        நாதனே உனைப் பிரிவறா அருளைப் காட்டித்தேவநின் கழலிணை காட்டிக்        காயமாயத்தைக் கழிந்தருள் செய்யாய் சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே        திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே.         402 அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக்        கார்கிலேன் திருவருள் வகையறியேன் பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன்        போற்றி போற்றியென் போர்விடைப் பாகா இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க        எனசெய்கேன்இது செய்க என்றருளாய் சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ்        திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே.         403 மாயனேமறிகடல்விடம் உண்ட        வானவாமணி கண்டந்தெம் அமுதே நாயினேன் உனைநினையவும் மாட்டேன்        நமச்சிவாய என் றுன்னடி பணியாய் பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்        பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ சேயனாகிநின்றலறுவ தழகோ        திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே.         404 போது சேரயன் பொருகடற் கிடந்தோன்        புரந்த ராதிகள் நிற்கமற்றென்னைக் கோதுமாட்டிநின் குரைகழல் காட்டிக்        குறிக்கொள் கென்றுநின்தொண்டரிற் கூட்டாய் யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே        அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ சீதவார்புனல் நிலவிய வயல்சூழ்        திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே.         405 ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்        நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய்        கங்கை யாய் அங்கி தங்கிய கையாய் மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே        மரக்க ணேனேயும் வந்திடப் பணியாய் சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்        திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே.         406 அளித்துவந்தெனக் காவஎன்றருளி        அச்சந்தீர்த்தநின் அருட்பெருங்கடலில் திளைத்துந்தேக்கியும் பருகியும் உருகேன்        திருப்பெருந்துறையுறை சிவனே வளைக்கை யானொடு மலரவன் அறியா        வான வாமலை மாதொரு பாகா களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன்        கயிலை மாமலை மேவிய கடலே.         407 திருச்சிற்றம்பலம் Back 24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம் (திருப்பெருந்துறையில் அருளியது - கலவைப் பாட்டு) செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன் புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே.         408 வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே அராப் பூண்பவனேபொங்க கங்கைசடைக் செறுப்பவனே நின்திருவருளால் பிறவியைவேர் அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே.         409 பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.         410 பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புaணைகொண் டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.         411 சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்திடங்கண் வெருள்புரிமான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.         412 மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் வாழியெப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வலவினையேன் ஆழியப் பாவுடை யாய் அடியேன் உன் அடைக்கலமே.         413 மின்கணினார்நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப் புன்கணனாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி என்கணிலே அமுதூற்றித்தித் தித்தென் பிழைக்கிரங்கும் அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.         414 மாவடு வகிரன்ன கண்ணியங் காநின் மலரடிக்கே கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய் நின் குறிப்பறியேன் பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்த உள்ளம் ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.         415 பிறிவறியார் அன்பாநின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறியாச் செல்வம்வந்துபெற்றார் உன்னை வந்திப்பதோர் நெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் அறிவறி஧ன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.         416 வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்விக்கி஧ன் வினையேன் என்விதியின்மையால் தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய் அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.         417 திருச்சிற்றம்பலம் Back 25. ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியையோ இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.         418 மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.         419 சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரயுஞ் சிறுகுடில் இது சிதையக் கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.         420 மிடைந்தெலும் பூத்தை மிகக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம் அடைந்து நின்றிடவும் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.         421 அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.         422 எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.         423 பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.         424 கையால் தொழுதென் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர மெமுகொப்ப ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.         425 செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக் கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப் படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.         426 வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.         427 திருச்சிற்றம்பலம் Back 26. அதிசியப் பத்து - முத்தி இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது - அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்) வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே செப்பு நேர்முலை மடவரலியர்தங்கள் திரத்திடை நைவேனை ஒப்பிலாதான உவமணி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         428 நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன் ஏதமே பிறந்திறந்துழல்வேன் என்னடி யானென்று பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்ற ஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         429 முன்னை என்னுடை வல்வினை போயிடமுக்கண துடையெந்தை தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப் பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதியதுவைத்த அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         430 பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரணம்இதுகேளீர் ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே செத்துப் போய்அருநரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         431 பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன் குரவு வார் குழலார் திறத்தே நின்றுகுடிகெடு கின்றேனை இரவு நின்றெறி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         432 எண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடுநல்வினை நயவாதே மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படு கின்றேனை அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         433 பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         434 நீக்கி முன்னென்னைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         435 உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல் பற்றலாவ தோர் நிலையிலாப் பரம்பொருள் அகப்பொருள் பாராதே பெற்றவா பெற்ற பயனது நுகர்த்திடும் பித்தர்சொல் தெளியாமே அந்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.         436 இருள்திணிந்தெழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடிலிதுவித்தைப் பொருளெனக்களித் தருநரகத்திடை விழப்புகுகின்றேனைத் தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே.         437 திருச்சிற்றம்பலம் Back 27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்) சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப் புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.         438 ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்ததைப் புலனாய சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப் போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.         439 நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ளத் தடியார்முன் வேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப் பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.         440 அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ் சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.         441 திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம் புகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.         442 பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப் பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப் புரிந்து நிற்பதென்று கோல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.         443 நினையப்பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் தனையொப் பாரை யில்லாத தனியை நோக்கித் தழைத்துத் தழு த்தகண்டம் கனையப் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற் புனையப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.         444 நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.         445 தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும் ஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப் போதாய்ந் தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.         446 காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம் முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட பார்ப்பானே எம்பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் பூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.         447 திருச்சிற்றம்பலம் Back 28. வாழாப்பத்து - முத்தி உபாயம் (திருப்பெருந்துறையில் அருளியது - அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.         448 வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ் செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே.         449 பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.         450 வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆகியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.         451 பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.         452 பஞ்சின்மெல்லடியான் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.         453 பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.         454 பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.         455 பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.         456 பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.         457 திருச்சிற்றம்பலம் Back 29. அருட்பத்து - மகாமாயா சுத்தி (திருப்பெருந்துறையில் அருளியது - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) சோதியே சுடரே சூழொளி விளக்கே        சுரிசூழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய்        பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்        நிறைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்        அதெந்துவே என் றரு ளாயே.         458 நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்        கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி        உலகெலாந் தேடியுந் காணேன் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில்        செழுமலர்க் குருந்தமே வியசீர் அருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால்        அதெந்துவே என்றரு ளாயே.         459 எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா        ஏலவார் குழலிமார் இருவர் தங்கள் நாயகனே தக்கநற்காமன்        தனதுடல் தழலெழ விழித்த செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில்        செழுமலர்க் குருந்தமே வியசீர் அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்        அதெந்துவே என்றருளாயே.         460 கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்        கண்ணனும் நண்ணுதற்கரிய விமலனே எமக்கு வெளிப்படா யென்ன        வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய் திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்        செழுமலர்க் குருந்தமே வியசீர் அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்        அதெந்துவே என்றரு ளாயே.         461 துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை        துணைமுலைக் கண்கள்தோய் சுவடு பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு        பொங்கொளி தங்குமார் பின்னே செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில்        செழுமலர்க் குருந்தமே வியசீர் அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்        அதெந்துவே என்றரு ளாயே.         462 துப்பனே தூயாய் தூயவெண்ணீறு        துதைந்தெழு துளங்கொளி வயிரத் தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்        உறுசுவை துளிக்கும் ஆரமுதே செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில்        செழுமலர்க் குருந்தமே வியசீர் அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்        அதெந்துவே என்றரு ளாயே.         463 மெய்யனே விகிர்தா மேருவே வில்லா        மேலவர் புரங்கள் மூன்றெரித்த கையனே காலாற் காலனைத் காய்ந்த        கடுந்தழற் பிழம்பன்ன மேனிச் செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில்        செழுமலர்க் குருந்தமே வியசீர் ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்        அதெந்துவே என்றரு ளாயே.         464 முத்தனே முதல்வா முக்கணா முனிவா        மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்        பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்        செழுமலர்க் குருந்தமே வியசீர் அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்        அதெந்துவே என்றரு ளாயே.         465 மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி        மறுமையோ டிம்மையுங் கெடுத்த பொருளணே புனிதா பொங்குவா ளரவங்        கங்கைநீர் தங்குசெஞ் சடையாய் தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்        செழுமலர்க் குருந்தமே வியசீர் அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்        அதெந்துவே என்றரு ளாயே.         466 திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்        செழுமலர்க் குருந்தமே வியசீர் இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்        டென்னுடை யெம்பிரான் என்றென் றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்        அலைகடல் அதனுளே நின்று பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்        போதராய் என்றளு ளாயே.         467 திருச்சிற்றம்பலம் Back 30. திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம் (திருக்கழுக்குன்றத்தில் அருளியது - ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க் கிணக்கிலாததோர் இன்ப மேவுருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கிலாததோர் வித்துமேல்யிளை யாமல் என்வினை ஒத்தபின் கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.         468 பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனைச் சார்ந்திலேன் சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங் கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.         469 மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன் இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.         470 பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றரும் நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான் பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங் காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.         471 கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங் காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.         472 பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய் சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக் காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.         473 இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும் துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனக் கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.         474 திருச்சிற்றம்பலம் Back 31. கண்டபத்து - நிருத்த தரிசனம் (தில்லையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா) இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே.         475 வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச்சிறுதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை எனைப்பெரிதும் ஆட்கொண்டேன் பிறப்பறுத்த இணையிலியை அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே.         476 உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்திருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே.         477 கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாகி னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம் பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே.         478 சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலுறுந் தாட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே.         479 பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும் உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே.         480 பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் வினையாடல் விளங்குதில்லை கண்டேனே.         481 அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக் களவிலா வானவருக் தொழுதில்லை கண்டேனே.         482 பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே.         483 பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே.         484 திருச்சிற்றம்பலம் Back 32. பிரார்த்தனைப் பத்து (திருப்பெருந்துறையில் அருளியது - அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள் உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான் அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே.         485 அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே.         486 அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே.         487 வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால் ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல் வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே.         488 மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே காவி சேருங் கயற்கண்ணான் பங்கா உன்றன் கருணையினால் பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந் தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே.         489 அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும் புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாய் பிரிவில்லா மறவா நினையா அளவில்லா மாளா இன்ப மாகடலே.         490 கடலே அனைய ஆனந்தக் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன் உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன் சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே.         491 துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்து திணியார் மூங்கிற் சிந்தையேன் நின்று தேய்நின்றேன் அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத் தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே.         492 தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம் ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே.         493 மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே ஊனே புகுந்த உனையுணர்ந்த உருகிப் பெருகும் உள்ளத்தைக் கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடிவதே.         494 கூடிக்கூடி உன்னடியார் குளிப்பார் சிரிப்பார் களிப்பாரா வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ ஊடி ஊடி உநடியாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு ஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே.         495 திருச்சிற்றம்பலம் Back 33. குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம் (திருப்பெருந்துறையில் அருளியது - அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்        காவாய் உடையாய் கொடுவினையேன் உழைத்தா லுறுதியுண்டோ தான்        உமையாள் கணவா எனை ஆள்வாய் பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ        பிறைசேர் சடையாய் முறையோவென் றழைத்தால் அருளா தொழிவதே        அம்மானே உன்னடியேற்கே.         496 அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன் கொடியே ரிடையான் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே.         497 ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால் என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே.         498 மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ் வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய் ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே.         499 கூறும் நாவே முதலாக் கூறுங் கரணம் எல்லாம்நீ தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ.         500 வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே.         501 அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங் குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே.         502 நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங் காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே.         503 கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர எண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால் மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே.         504 அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாயே குழகா கோல் மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே.         505 திருச்சிற்றம்பலம் Back 34. உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலிடுதல் (திருப்பெருந்துறையில் அருளியது - கலிவிருத்தம்) பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என் மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா செந்நாவலர் பசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய் எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே.         506 நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான் தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே.         507 எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன் மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கிச் சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும் பனவன் னெனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே.         508 வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில் எனைத்தான்புகுந் தாண்டான்என் தென்பின்புரை யுருக்கிப் பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான் மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே.         509 பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர் கூற்றாங்கவன் கழல்பேணின ரோடுகூடுமின் கலந்தே.         510 கடலின்திரையதுபோல் வரு கலக்கம்மலம் அறுத்தென் உடலும்என துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான் சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும் படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே.         511 வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே.         512 கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும் நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே.         513 எச்சம் அறிவேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன் அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான் நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே.         514 வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே ஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன் தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய் நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே.         515 திருச்சிற்றம்பலம் Back 35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் (தில்லையில் அருளியது - அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         516 வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம் திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         517 வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         518 கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன் வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         519 பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         520 வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன் தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன் தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும் ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         521 தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும் முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         522 தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         523 மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச் செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         524 கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         525 திருச்சிற்றம்பலம் Back 36. திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு (தில்லையில் அருளியது - கட்டளைக் கலித்துறை) பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம் ஒருவரை ஒன்றுமில்லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித் தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை யன்றி உருவறியா தென்றன் உள்ளமதே.         526 சதுரை மறந்தறி மால்கொள்வார் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம் கதிரை மறைத்தனன் சோதி கழுக்கடை கைப்பிடித்துக் குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர் மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே.         527 நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர் பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் ஓரின்ப வெள்ளத்துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார் பேரின்ப வெள்ளத் துட் பெய்கழ லேசென்று பேணுமினே.         528 செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம் எக் காலத்துள்ளும் அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி எறியும் பிறப்பை எதிர்த்தார் புரள இருநிலத்தே.         529 காலமுண்டாகவே காதல்செய் துய்மின் கருதரிய ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே.         530 ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத் தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன் வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தான் பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே.         531 மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும் போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக் காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ் சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே.         532 அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக் கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே.         533 விரவிய தீவினை மேலைப் பிறப்புழுந் நீர்கடக்கப் பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புத்திக் கொளப் பட்ட பூங்கொடியார் மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே.         534 கூற்றைவென் றாங்கைவர் கோக்களையும் வென்றிருந்தழகால் வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும் ஓர் மீனவன்பால் ஏற்றுவந் தாருயி ருண்ட திறலொற்றைச் சேவகனே தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே.         535 திருச்சிற்றம்பலம் Back 37. பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல் (திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்) உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.         536 விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.         537 அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.         538 அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.         539 ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.         540 அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப் பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பெருளே திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.         541 பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப் பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.         542 அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச் சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும் எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.         543 பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.         544 புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற்சோதி இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.         545 திருச்சிற்றம்பலம் Back 38. திருஏசறவு (திருப்பெருந்துறையில் அருளியது - கொச்சகக் கலிப்பா ) இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே.         546 பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக் கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே.         547 ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில் ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன் பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே.         548 பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர் உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு எச்சத்தார் சிறுதெய்வம் எத்தாதே அச்சோஎன் சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே.         549 கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந் துற்றறிமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப் பொற்றிவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே.         550 பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால் உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே.         551 என்பலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க் கும் அறியவொண்ணா தென்பாலைத் திருப்பெருந் துறையுறையஞ் சிவபெருமான் அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே.         552 மூத்தானே மூவாத முதலானே முடியில்லா ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப் பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே.         553 மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத் தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப் பருகியநின் பரங்கருணைத் தடங்கலிற் படிவாமாறு அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே.         554 நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.         555 திருச்சிற்றம்பலம் Back 39. திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு (திருவாரூரில் அருளியது - கொச்சகக் கலிப்பா) பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின் பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே.         556 சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப் படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான் உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே.         557 உற்றாறை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாறை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.         558 திருச்சிற்றம்பலம் Back 40. குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை (தில்லையில் அருளியது - கொச்சகக் கலிப்பா) ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன் ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.         559 துடியோர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால் செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும் முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.         560 என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுத்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.         561 குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப் பிரியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனைச் செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.         562 பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத் தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ் சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.         563 கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும் அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.         564 மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய மிதக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக் கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங் கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.         565 இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால் கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.         566 பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக் கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத் தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால் ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.         567 கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச் செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு இம்பை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும் அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.         568 திருச்சிற்றம்பலம் Back 41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை (திருப்பெருந்துறையில் அருளியது - அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத் தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே.         569 ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப் போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே.         570 நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக் கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப் பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே.         571 பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க் கருங் குழலினனார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்பனை சிலம்பிடத் திருவொடும் அகலாத அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியனே.         572 மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவிய திரிவேனை வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே.         573 வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும் பிணைந்து வாயிதழ்ப் பொருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக் குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.         574 இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித் தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள் மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.         575 ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளிவாக்கிப் பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பொருங் கருணையால் ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே.         576 பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை இச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.         577 செறியும் இப்பிறவிப் பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங் கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.         578 திருச்சிற்றம்பலம் Back 42. சென்னிப்பத்து - சிவவிளைவு (திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்) தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான் யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான் தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே.         579 அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மேயச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன் வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே.         580 நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன் தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன் மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான் பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே.         581 பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான் எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.         582 மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கியான் வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான் காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.         583 சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுந் துய்யலாம் பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும் முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும் அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.         584 பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேரருள்தந் தருளினான் அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல் உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.         585 புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும் எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று தொழுத கையின ராகித் துய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.         586 வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும் உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்தனாய் நின்ற எம்பிரான் அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ் செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.         587 முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தனைச் சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடித் திரிதரும் பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணியினோ சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.         588 திருச்சிற்றம்பலம் Back 43. திருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல் (திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வார் எம்பிரானாவாரே.         589 மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன் ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம்திகழும் கோல மணியணி மாடநீடு குலாவு மிடைவை மடநல்லாட்குச் சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே.         590 அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம் பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப் பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார் எம்பிரானாவாரே.         591 வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத் தேட இருந்த சிவபெருமான் சித்தனை செய்தடி யோங்களுய்ய ஆடல் அமர்ந்த பரிமாஎறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள் ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே.         592 வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார் பந்தணை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள் உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங்கை அதினிற் பந்தணை மெல்லிர லாட்கருளும் பரிசளி வார்எம் பிரானாவாரே.         593 வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவனாய்க்கடி நாய்கள்சூழ ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெருமான்தான் இயங்கு காட்டில் ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதியன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே.         594 நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார் ஓதிப் பணிந்திலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப் பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே.         595 பூவலர் கொன்றையும் மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன் மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வன்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன் ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணாற்குத் தீயில்தோன்றும் ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே.         596 தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளிஅன்று காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக் கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே.         597 அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச் சங்கங் கவரந்நதுவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளிஅன்று மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே.         598 திருச்சிற்றம்பலம் Back 44. எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை (தில்லையில் அருளியது - எழுசீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்) பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல் ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.         599 உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும் தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற் பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப் பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே.        600 என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவர் முனிவர் முழுமுதலே இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே        601 பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப் பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே.         602 காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டு கண் களிகூரப் பேணும தொழிந்தேன் பிதற்றம தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால் காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே.        603 பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு எதிர்த்து தோற்றிமெய் யடியார்க் கருட்டுரை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன் போற்றியென் அமுதே என நினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே.         604 திருச்சிற்றம்பலம் Back 45. யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல் (தில்லையில் அருளியது - அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள் போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே.         605 புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே.         606 தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.         607 அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக் கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச் செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான் பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே.         608 விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின் அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே.         609 புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம் நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே.         610 நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே.         611 பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச் திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே.         612 சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே.         613 புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர் மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன் அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே.         614 திருச்சிற்றம்பலம் Back 46. திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர் (தில்லையில் அருளியது - கலிவிருத்தம்) ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின் மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின் ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே.         615 தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர் ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள் திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள் அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே.         616 திருச்சிற்றம்பலம் Back 47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை (திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா) வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ மருவா திருந்தேன் மனத்து.         617 ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான் தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து.         618 செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத் திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான் பெருந்துறையில் மேய பிரான்.         619 முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன் பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் வருந்துயரந் தீர்க்கும் மருந்து.         620 அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன் பெருந்துறையும் மேய பெருமான் பிரியா திருந்துறையும் என்னெஞ்சத் தின்று.         621 பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன் பெருந்துறையாள் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் மருந்திறவாப் பேரின்பம் வந்து.         622 வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார் திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய ஒருத்தன் பெருக்கும் ஒளி.         623 யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை.         624 மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே இன்பம் மிகும்.         625 இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித் திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண் பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன் மருந்துருவாய் என்மனத்தே வந்து.         626 இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச் சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து.         627 திருச்சிற்றம்பலம் Back 48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல் (திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா ) பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக் கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே உண்டாமோ கைம்மா றுரை.         628 உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன் வெள்ளந் தரும்பரியின் மேல்வந்து வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்காள் வாழ்த்தக் கருவுங் கெடும்பிறவிக் காடு.         629 காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன் நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம் மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து.         630 வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந் தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர் சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை நன்றிறைஞ்சி ஏத்தும் நமர்.         631 நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின் மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக் கழியா திருந்தவனைக் காண்.         632 காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப் பேணும் அடியார் பிறப்பகலக் காணும் பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானை வாயாரப் பேசு.         633 பேசும் மொருளுக் கிலக்கிதமாய்ப் பேச்சிறந்த மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப் பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல மருந்தினடி என்மனத்தே வைத்து.         634 திருச்சிற்றம்பலம் Back 49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் (தில்லையில் அருளியது -சிவ உபாதி ஒழித்தல் - பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே.         635 ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பது மாகாதே கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே காரணமாகும் அனாதி குணங்கள் கருத்தறு மாகாதே நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணினு மாகாதே என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே.         636 பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே ஆதி முதற்பா மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன வாகாதே இந்திர ஞால இடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே என்னுடைய நாயக னாகியஈசன் எதிர்ப்படு மாயிடிலே.         637 என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே மாமறை யும் அறியாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பே றிலே.         638 மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே பெண்ணலி ஆணென நாமௌ வந்த பிணக்கறு மாகாதே பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே.         639 பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே.         640 சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே பல்லியல் பாயப் பரப்பற வந்த பராபர மாகாதே பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே.         641 சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே.         642 திருச்சிற்றம்பலம் Back 50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம் (தில்லையில் அருளியது - சிவானுபவ விருத்தம் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாவே.         643 என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன் உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன் பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே.         644 சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே.         645 கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய் படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே.         646 தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.         647 கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.         648 நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே.         649 திருச்சிற்றம்பலம் Back 51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை (தில்லையில் அருளியது) முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.         650 நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.         651 பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.         652 மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன் கண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம் அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே.         653 பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன் உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே.         654 வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக் கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.         655 தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.         656 சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக் காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.         657 செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான் நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.         658 செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும் அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.         659 படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும் குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம் நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே.         660 பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே.         661 திருச்சிற்றம்பலம் Back திருவாசகம் முற்றிற்று This Unicode version was last revised on 13 Sept. 2012 Please send your comments and corrections to the Webmaster (pmadurai@gmail.com)